சினிமா

‘நான் அவரவிட கருப்பு திராவிடன்’ - யுவன் சங்கர் ராஜாவின் பதிவுக்கு அண்ணாமலை பதில்

‘நான் அவரவிட கருப்பு திராவிடன்’ - யுவன் சங்கர் ராஜாவின் பதிவுக்கு அண்ணாமலை பதில்

சங்கீதா

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்தக் கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதிவுகள் பகிரப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலர், அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிந்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்' என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான்; நானும் கருப்பு திராவிடன் தான் என்று தெரிவித்தார். மேலும் அவர், இவர்கள் அனைவரையும் விட தமிழ் உணர்வு அதிகம் கொண்டவன் நான் என்றும், எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், அவர் கடற்கரையில் நின்ற படி ஏதோ புகைப்படம் எடுத்துப்போட்டுள்ளார் எனவும், இந்த விஷயத்தை இத்தோடு விடுங்கள் என்றும் தெரிவித்துள்ள அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.