Thangalaan movie promotion pt desk
கோலிவுட் செய்திகள்

"அஜித், சூர்யா அளவு உங்களுக்கு Fans இல்லயே?" - Cool-ஆக பதில் சொன்ன விக்ரம்!

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில், நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன், வில்லன் நடிகர் டேனியல் கலந்து கொண்ட தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் விக்ரம் பேசுகையில்...

Thangalaan movie

‘மதுரை எனக்கு ஸ்பெஷல்’

“மதுரை எனக்கு ஸ்பெஷலான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரைதான் நினைவுக்கு வரும். அனைத்து விடுமுறையிலும் இங்குதான் இருப்பேன், மதுரை என்றாலே மக்கள், விடுமுறை, கோவில், பாட்டு, அழகர்கோவில், கழுதைகள் என அனைத்தும் நினைவுக்கு வரும். நான் மதுரையில் சாப்பிட்டு என்ஜாய் பண்ணினேன்.

‘டேனியல் இந்தியராகவே மாறிட்டார்’

ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பும், அதில் இறங்கி வேலை செய்ய வேண்டும். இந்த படத்தில் நடித்த நடிகர் டேனியலுக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது. அதன் பின் ஆப்ரேஷன் செய்து 3 மாதம் ரெஸ்ட் எடுத்தார். பின்னர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். படத்துக்காக உயிரைக் கொடுத்து நடித்தார். டேனி பேசும் இங்கிலீஸ் எனக்கே தெரியும். அனைவரோடும் கனெக்ட் ஆகி, இந்தியராகவே மாறிவிட்டார்.

Thangalaan movie

‘தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும்’

மாளவிகா யார் என்பது இந்த படம் மூலம் தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார், தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும், இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல இருக்கும், இசையை பொறுத்தவரை மக்களுக்கு புரியும் வகையில் புதிய சப்தங்ஙள், புதிய கருவிகள் பயன்படுத்தியுள்ளார் ஜிவி.பிரகாஷ்.

பா.ரஞ்சித்தோடு பணி புரிந்தது மகிழ்ச்சி. எனக்கு பிடித்த இயக்குனர். அவரோடு படம் செய்தது பெருமையாக உள்ளது. தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும், இந்த படக்குழுவில் பணியாற்றிய லைட்மேன் வரை அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை தயாரிக்க ஞானவேல் தைரியத்தோடு வந்தார், இது முக்கியமான படமாக அமையும், இந்தப் படம் அனைவருக்குமான படமாக இருக்கும், தங்கலான் படம் நம்ம வரலாறு என நீங்கள் பெருமைபடுவீர்கள்” என்றார்.

அப்போது அவரிடம், “ஒவ்வொரு முறையும் உங்களுடைய சிறந்த நடிப்பை நீங்கள் கொடுக்கின்றீர்கள். இருந்தும், அஜித் சூர்யா போன்ற ரசிகர் பட்டாளம் உங்களிடம் இல்லாமல் இருக்கிறது...அது ஏன்?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு விக்ரம் கூலாக, “என் ரசிகர் பட்டாளம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. வாங்க, வந்து தியேட்டர்ல பாருங்க. உங்களுக்கு இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலன்னா சொல்லுங்க, நான் வாங்கித் தரேன்.

டாப் 1, 2, 3 என்பதெல்லாம் உங்கள் பார்வை. உண்மையில் இங்குள்ள எல்லா தரப்பு ரசிகர்களுமே என் ரசிகர்கள்தான். பெரியளவில் நான் என்றோ வந்துவிட்டேன். தூள், சாமி படங்களெல்லாம் பண்ணவன்தான் நான். எல்லாம் செய்துவிட்டு, தமிழ் சினிமாவுக்கு வேற என்ன பண்ணலாம், சினிமாவை எங்கு கொண்டு செல்லலாம் என்று இப்போது யோசித்து யோசித்து படம் செய்து கொண்டிருக்கிறேன். அப்படி உழைத்ததால்தான் இன்று தங்கலானும், வீர தீர சூரணும் நடித்துள்ளேன்” என்றார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் விக்ரமிற்கு பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.