கவுண்டம்பாளையம் விவகாரம் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

கவுண்டம்பாளையம் பட விவகாரம் | திரையரங்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

PT WEB

செய்தியாளர் - சுப்பையா

நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பழனிச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலொன்று செய்திருந்தார்.

அதில், “எங்கள் படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கையொன்று வைத்திருந்தார்.

நடிகர் ரஞ்சித்

மேலும் அந்த மனுவில், “தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில் இந்தப் படத்தை திரையிட முடிவு செய்த நிலையில் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் பின்வாங்கி விட்டனர். எந்த சாதி மத மொழிக்கு எதிராகவும் இந்தப் படம் எடுக்கப்படவில்லை. முறையான தணிக்கை சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை திரையிடுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் “எந்த திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. மனுதாரரும் எந்த திரையரங்கத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. 150 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறை

இதையடுத்து “எந்த திரையரங்குகளில் பாதுகாப்பு தேவை என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் படக்குழு மனு அளிக்கும் பட்சத்தில், அந்த திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.