விஜய் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

இதயங்களை வென்ற ‘இளைய தளபதி’ முதல் மாஸான ஆட்டநாயகன் ‘தளபதி’ வரை ஓகேதான்! - தலைவனாக ஜொலிப்பாரா விஜய்?

ஜெ.நிவேதா

20 வருடங்கள் கழித்து ஒரு படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆனால் அது காலம் கடந்த படம் என நமக்கு தோன்றவே இல்லை. இன்றுதான் வெளியாவது போல கொண்டாடுகிறது நம் மனம். இன்ஸ்டா, யூட்யூப், ட்விட்டர் என தெறிக்கவிடுகிறார்கள் ரசிகர்கள். படத்தை எடுத்தவர்கள், அதில் நடித்தவர்களேவும் இதை பார்த்து வியக்கிறார்கள். இதையெல்லாம் நம்மிடம் 2, 3 மாதங்களுக்கு முன் யாரும் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்க மாட்டோம். ஆனால் இப்போது நம்புவோம். காரணம், அந்த மேஜிக். அதை நிகழ்த்தி காட்டியது,

கில்லி!
விஜய்

சொல்லியடித்த அந்த கில்லி, வேற யாரு... நம்ம தளபதியேதான்.!

‘ஹாய் நண்பா நண்பீஸ்...’

‘என் நெஞ்சில் குடியிருக்கும்...’

என்ற குரலை கேட்டால்போதும்... இந்த ஒற்றை வரியில் ஓராயிரம் இதயங்கள் ஆர்ப்பரிக்கும்... திரையில் இவர் தோன்றும் முதல் காட்சிக்கு, ஒட்டு மொத்த திரையரங்கமே அதிரத் தொடங்கும்... பஞ்ச் வசனம் பேசினால் விசில் பறக்கும்... ஆடினால் கைதட்டல் சத்தம் விண்ணை பிளக்கும்... இப்படி, இன்னும் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்...

ரசிகர் நெஞ்சங்களின் அதிபதி... தமிழ் சினிமாவின் தளபதி விஜய்..!

தளபதியை கொஞ்சம் ரீவைண்ட் செய்தால், இளைய தளபதி வருவார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், உண்மையான விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஓரத்தில் தளபதியை விட இளைய தளபதியைதான் அதிகம் பிடிக்கும்.

விஜய்

எப்போதும் துருதுருவென இருப்பது, க்யூட்டான காதலை வெளிப்படுத்துவது, நேசிச்ச பொண்ணுக்காக ‘ஆயிரம் பேர் எதிர்க்க வந்தாலும், உங்கூட நான் இருக்கேன், நான் பாத்துக்குறேன்’ என ரிலேஷன்ஷிப்பில் Green Forest-ஆக இருப்பது, தங்கச்சி / தம்பியோடு பாசத்துக்கு கட்டுப்பட்டு அவங்களுக்காகவே வாழ்வது, அப்பாகிட்ட லேசான உரசலோடையும் அம்மாகிட்ட பாசமழையாவும் இருப்பது.... இதுக்கிடையில ‘வீசிப்போன புயலில் வேர்கள் சாயவில்லை..’ என அந்த குண்டு கண்ணங்களோடு க்யூட் ஸ்டெப்ஸோடு பாட்டு பாடுவது... நடிகர் கவின் ஒரு பேட்டியில் சொல்வது போல, ‘அப்படியே அந்தப் புயல்ல நாமளும் போயிட வேண்டியதுதான்...’!

விஜய்

தளபதியாக வாரிசில் வந்த ‘ரஞ்சிதமே’ பாட்டில் விஜய்யின் நடனத்தை ரசித்தவர்களை விட, இளையதளபதியாக ‘ஷாஜஹான்’ பட பாடல்களில் விஜய்யின் நடனத்தை ரசித்தவர்கள்தானே அதிகம்?

‘மிஸ் யூ இளைய தளபதி’ என சொல்லாத விஜய் ஃபேன்ஸ் யாரும் இருக்காங்களா என்ன?

என கேட்க வைக்கும் அளவுக்கு இருந்த விஜய், கில்லிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாஸ் மசாலாவை கையில் எடுத்தார்.

விஜய்

இருந்தபோதும், மேல் சொன்ன எல்லாமே படத்தில் இருக்கும். அதோடு கொஞ்சம் தூக்கலாக மாஸ் விஷயங்கள் இருக்கும். ஆனால் ஒருகட்டத்துக்கு பின் மாஸ்தான் அதிகம், மத்த எல்லாம் அங்கங்கே என்றாகிவிட்டது. அதற்காக தளபதியை பிடிப்பது மாறிவிடுமா? இளைய தளபதி க்யூட்னா, தளபதி மாஸ்டா என கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.

அரசியலில் நாளைய தீர்ப்பை எழுதப் போகும் விஜய்!

இப்படியாக நாளைய தீர்ப்புக்காக காத்திருந்த விஜய், இளைய தளபதியாக இருந்து தளபதியாக உயர்ந்து, இன்று கட்சியொன்றுக்கும் தலைவராகி இருக்கிறார். அன்று சினிமாவில் நாளைய தீர்ப்புக்காக காத்திருந்தவர், இன்று அரசியலில் நாளைய தீர்ப்பை எழுதிக்கொண்டிருக்கிறார்.

விஜய்

தன் 18 வயதில் ஹீரோவாக அறிமுகமாகி, 30 வருடங்களாக ஓடிக்கொண்டே இருக்கும் இந்த திரை நட்சத்திரம், இன்று Half Century அடிக்கிறது. 50 வது வயதில், அடுத்ததொரு முயற்சியாக, அரசியலில் கால்பதிக்க உள்ளார் விஜய். அதனால் திரைத்துறையிலிருந்து தான் விலகுவதாகவும் கடந்த வருடம் அறிவித்திருந்தார்.

விஜய்யின் தாரக மந்திரங்களில் ஒன்று, ‘Compete with yourself. Only that will make you better. தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும்தான் நம்மளை ஓடவைக்கும். உனக்கு நீதான் எதிரி, நீதான் போட்டி... அடுத்தவங்களை போட்டியாவோ எதிரியாவோ பாக்காம, நம்மளையே நாம போட்டியா நினைச்சு ஓடணும்” என்பார் விஜய். தன் ரசிக கண்மணிகளுக்கு சொல்வதையே, தன் வாழ்விலும் செய்யும் விஜய்யின் பேச்சு மட்டும்தான் சைலண்ட்... செயலெல்லாம் அதகளம்தான்!

விஜய்

சினிமாவிலும், நிஜத்திலும் பதித்த அரசியல் தடங்கள்..

அதை தன் சினிமாவிலும் அரசியல் வசனங்கள் மூலம் காட்டியிருப்பார் விஜய். கத்தி படத்தில் 2ஜி ஊழல் குறித்த வசனமாகட்டும், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வசனமாகட்டும், சர்கார் படத்தில் அரசுக்கு எதிரான வசனமாகட்டும்.... எல்லாமே அரசியல் அலப்பறைகள்தான். சினிமாவைதாண்டி, களத்திலும் அவ்வபோது வந்துகொண்டுதான் இருந்தார் விஜய். குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கருத்து சொன்னது, அனிதா மரணத்தின்போது அவர் வீட்டுக்கே சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னது என்றிருந்தார்.

‘எதுவா இருந்தாலும் 2026-ல்தான்’

தற்போது தன் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகவும் மாற்றியிருக்கிறார். இன்னும் கட்சி கொள்கைகள் எதையும் அறிவிக்கவில்லை. என்ன மாதிரியான அரசியல் என்று சொல்லவும் இல்லை. ‘எதுவா இருந்தாலும் 2026-ல்தான்’ என்பதில் திட்டவட்டவட்டமாக இருக்கிறார். இருப்பினும் கல்வி விழா என்ற பெயரில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளித்து, அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர்ந்துவருகிறார். தன்னுடைய இந்த புத்திசாலித்தனத்தால், சினிமாவை போல அரசியலிலும் சாதிப்பாரா விஜய்?

விஜய்

சர்கார் ஆடியோ லான்ச்சில் பேசும்போது, “நான் முதலமைச்சரனால் நடிக்க மாட்டேன்” என்று கூறியது, லியோ ஆடியோ லான்சில், "Small aim is Crime. பெரிதினும் பெரிது கேள்” என்றதெல்லாம் வைத்து பார்க்கும்போது, அரசியலில் நிச்சயம் பெரிய பதவியை பிடிக்கவே செயல்படுவார் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.

ஆனால் இங்கே பதவி என்பது எது என்பதிலும் ட்விஸ்ட் இருக்கு. மக்கள் மனசுல உயர்ந்து நிக்கப்போறாரா? இல்ல பதவியிலயும் உயர்ந்து நிக்கப்போறாரா? இல்ல ரெண்டுலயுமே ஏதாச்சும் சறுக்கல் எதையும் சந்திப்பாரோ? இப்படி இன்னும் நிறைய கேள்விகள், கணிப்புகள் விஜய் முன்னாடி உள்ளன.

‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு தளபதி!’

என சினிமாவில் கொண்டாடும் ரசிகர்கள் அரசியலிலும் அவரை ஏற்பார்களா? உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க!