ஜிவி பிரகாஷ்  முகநூல்
கோலிவுட் செய்திகள்

“தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா...?” - ஜிவி பிரகாஷ்

ஜெனிட்டா ரோஸ்லின்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் அவரது மனைவி சைந்தவியும் விவகாரத்து பெறவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தகவல்கள் பரவிவந்தன. இந்தநிலையில், இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக மே 13 ஆம் தேதி இரவு அறிவித்தனர்.

இதன்படி, “11 வருட திருமண உறவில் இருந்து நாங்கள் விலகுவதாக முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் நண்பர்களும், ரசிகர்களும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார் ஜிவி பிரகாஷ். ஆனால், இதனையும் தாண்டி சமூக வலைதளங்களில் இவர்களின் விவாகரத்தை சிலர் ட்ரோல் செய்தும், விமர்சித்தும் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜிவி பிரகாஷ்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள் . அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார்.