இயக்குநர் வெற்றிமாறன் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

“இந்தியா முழுவதும் சாதிய அடக்குமுறைகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன” - இயக்குநர் வெற்றிமாறன்

PT WEB

செய்தியாளர் - ராஜூ கிருஷ்ணா.

ஒளிப்பதிவாளர் - நாராயணமூர்த்தி.

இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறிய பதில்களை, இங்கே காணலாம்...

இயக்குநர் வெற்றிமாறன்

நெல்லைக்கு வந்தது குறித்து...

“இயக்குநர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்துள்ளேன். சீரியஸான அமீர் ஜாலியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 

இந்தியாவில் சாதி...

இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது.

விடுதலை 2 - எந்த நிலையில் உள்ளது?

விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும்.

இயக்குநர் வெற்றிமாறன்

காப்புரிமை யாருக்கு சொந்தம்?

சம்பளம் கொடுத்துதான் வேலைக்கு நாம் செல்கிறோம். காப்புரிமை பிரச்சனை என்பது அனைத்து தளங்களிலும் உள்ளது. உருவாக்குபவர்களுக்கான உத்திரவாதமும் உரிமையும் தேவை என்றே நான் நினைக்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகம் குறித்து...

2026 ம் ஆண்டு முதல் அரசியலில் பணி செய்யப் போவதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. அவர்களது பணிக்கு பின்னரே அவர்களது செயல்பாடுகள் தெரியும். அரசியலுக்கு அனைவரும் வரலாம். அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிவிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, இதுவரை அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை.

“ஓடிடி-யை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது”

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி தளங்கள் மிகப் பெரிய பலமாக இருந்தது. தயாரிப்பாளர்கள் முதலீட்டை பெறுவதற்கு ஓடிடி தளம் மிகப்பெரிய உதவியாக அமைந்தது. ஆனால் ஓடிடி தளத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது. திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு, மக்கள் வந்து பார்த்தால் கிடைக்கும் வருவாய் எப்படி இருக்கும் என்ற நிலை மீண்டும் திரும்பி உள்ளது” என தெரிவித்தார்.