நடிகர் ரஞ்சித் puthiya thalaimurai
கோலிவுட் செய்திகள்

“சுயமரியாதை திருமணங்களை நிறுத்தவேண்டும்; சமூகநீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்”- நடிகர் ரஞ்சித்

webteam

செய்தியாளர்: பிரவீண்

கோவை கோனியம்மன் திருக்கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ரஞ்சித் மற்றும் படக் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.

“நாடக காதலை மையப்படுத்தி...”

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், “கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5ம் தேதி வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் இயக்கியும், நடித்தும் எடுக்கப்பட்டுள்ளது. கோவை பகுதியை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது.

Actor Ranjith

நாடக காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நாடக காதல்தான் இது. இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, கொலை, தற்கொலை ஆகியவை நடைபெற்று வருகின்றன. சுயமரியாதை திருமணம் என்று சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளன. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.

சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு மற்ற பெண்களை பண்ணச் சொல்லுங்க. அவர்கள் அப்படி, பண்ண மாட்டார்கள்.

பெற்றோர் இல்லாமல் எந்தவொரு திருமணமும் நடக்கக் கூடாது. அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள்தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு, சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே.

Ranjith

நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். என் படத்தில் மாட்டு இறைச்சி வசனம் உள்ளது. மாடுகள் தெய்வமாகவும், விவசாயத்திற்காகவும் காலம் காலமாக பக்கபலமாக உள்ளது. என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடக காதலை ஆதரிப்பவர்கள்.

அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா?

அரசியல் கட்சி ஆரம்பிக்க எனக்கு திட்டமில்லை. ஏற்கெனவே உள்ள கட்சிகளில் சேரவும் திட்டமில்லை.

“மதுவில் வரும் வருமானத்தில்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது”

கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். கள்ளுக்கடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் இவர்கள் (ஆட்சியாளர்கள்) அதை விரும்புவதில்லை. தமிழ்நாடு மதுவில் வரும் வருமானத்தில்தான் வளர்ச்சி அடைந்து வருகிறது.

“பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாத போது எப்படி கள்ளசாரயத்தை ஒழிப்பார்கள்?”

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். விவசாய தற்கொலைக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை? தற்போது மட்டும் ஏன் கொடுக்கின்றனர்? சாலைகளில் திரும்பும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளன. ஸ்லோ பாய்சன் அது. அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. கள்ளச்சாராயதை இவர்களால் ஒழிக்க முடியாது. பிளாஸ்டிக்கை இவர்களால் ஒழிக்க முடியாத போது எப்படி கள்ளசாரயத்தை ஒழிப்பார்கள்?

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் -

“கவுண்டம்பாளையம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு”

கவுண்டம்பாளையம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. அரசியல் மிகப்பெரிய வியாபாரம். எனவே அதில் அரசியல் கடைகள் (கட்சி) உள்ளது. புதிய கடைகளும் (கட்சி) திறக்கப்படவுள்ளது. நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது" என்று தெரிவித்தார்.