சினிமா

கொரோனா சிகிச்சை: மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன தமன்னா!

webteam

ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பின்போது, நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பதாக கண்டறியப்பட்டது. பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சில நாட்களுக்கு முன்பு முழுமையாக குணமடைந்த அவர், மும்பை வீட்டில் அவரது குடும்பத்தினருடன் ஒய்வைக் கழித்துவருகிறார்.

மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிய தமன்னா, தினமும் உடற்பயிற்சிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டுவருகிறார். தன்னை கொரோனா தொற்றில் இருந்து மீட்க, மிகுந்த அக்கறையுடன் சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் ஹைதராபாத் நகரில் நோயுற்று பலவீனமாக இருந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு நம்பிக்கையான வழியில் சிறந்த சிகிச்சையை அளித்தீர்கள். உங்களுடைய கருணையும் அக்கறையும் கவனமும் சிறப்பானது" என்று தமன்னா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் அவரது பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பில் இருந்தபோது தமன்னா பாதிக்கப்பட்டார். மும்பை வீட்டில் இருக்கும் அவர், தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார்.