ஹமாரே பாரா, உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
சினிமா

தொடர் சிக்கலில் ’ஹமாரே பாரா'| படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை..

’ஹமாரே பாரா’ திரைப்படத்தை வெளியிட உச்ச நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.

Prakash J

அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ’ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அதுதொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.

முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 1 முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் முடிவில் படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றிருந்த 2 சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கியதும் திரைப்படத்தை வெளியிடலாம் என அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், ’ஹமாரே பாரா’ திரைப்படம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி வெளியாகவிருந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, ’ஹமாரே பாரா’ என்ற பாலிவுட் திரைப்படத்தை, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வெளியிட தடை விதித்துள்ளது. இதற்கிடையே இப்படம், ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: பீகார்| இளைஞருக்கு காலில் எலும்பு முறிவு.. அட்டையை வைத்து கட்டுப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்!

இந்த நிலையில், “ ’ஹமாரே பாரா’ திரைப்படம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆகையால் நாளை (ஜூன் 14) வெளியாகும் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, ’’இம்மனு மீது விரைவான முடிவை எடுக்க மும்பை உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்ட, உச்சநீதிமன்றம் அதுவரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

முன்னதாக, இப்படப் பிரச்னையாக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் அன்னு கபூர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கர்நாடகா: கொலை வழக்கு.. ரூ.15 லட்சம் பேரம் பேசிய நடிகர் தர்ஷன்.. விசாரணையில் புதிய தகவல்!