சினிமா

தமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்

webteam

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழக நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவித்துள்ள நிலையில், சென்னை வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் ஸ்ரீ ரெட்டி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்த்திரையுலகினர் மீதும், ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார்களை கூறி வருகிறார். அண்மையில் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், “ முருதாஸ் ஜி எப்படி இருக்கீங்க?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கிரீன்பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கறதா? என்றும் முருகதாசிடம் அவர் கேட்டிருந்தார். அத்துடன் வெளிகொண்டா சீனிவாஸ் மூலம் உங்களுக்கு அறிமுகமான என்னுடன் பலமுறை இருந்தாலும் கூறியபடி வாய்ப்பு வழங்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஐதராபாத் வந்த போது தன்னை பாலியல் ரீதியாத பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதனால் தமிழ்த் திரையுலகில் சர்ச்சை உண்டானது. இந்நிலையில் தான் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி மீது ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “ஐதராபாத்தில் ‘அரண்மனை’ படப்பிடிப்பு நடந்தபோது, படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாக என் நம்பரை பெற்றீர்கள் என்றதற்கு, தெரிந்தவர் ஒருவர் மூலம் என்றார்.

பின்னர் நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அங்கு என்னை சுந்தர் சி.யிடம் அறிமுகம் செய்தார். அப்போது எனது ஃபேஸ்புக் நண்பரான கேமராமேன் செந்தில்குமாரையும் சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் உறுதியளித்தார். மறுநாள் போன் செய்து தனியார் ஓட்டலுக்கு அழைத்தார். அதன்பின்னர் சுந்தர்.சி பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளச் சொன்னார். அதன்பின்னர் நடந்தது கடவுளுக்கு தெரியும். ஆனால் மோசடி மனிதர் கணேஷ் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.