பிரியங்கா மோகன் X
சினிமா

‘இளம் மாமியாக அழகான நடனம் ஆடியுள்ளார்’-தனுஷ் படத்தில் பிரியங்கா மோகன் டான்ஸை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!

Rishan Vengai

நடிகர் தனுஷ் அற்புதமான நடிகர் என்பதை தாண்டி‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அதில் வெற்றியும் பெற்றார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், ஒரு நல்ல இயக்குநர் என்பதற்கான வரவேற்பும் தனுஷிற்கு கிடைத்தது.

இசை வெளியீட்டு விழாவின் போது ‘ஒரு இயக்குநராக எனக்கு எவ்ளோ மார்க் கொடுப்பிங்க’ என்ற தனுஷின் கேள்விக்கு 98 மதிப்பெண்கள் என சிறந்த இயக்குநராக அறியப்படும் செல்வராகவன் பதிலளித்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தான் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட இளம் நடிகர்கள் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இளம் மாமியாக க்யூட்டாக ஆடியுள்ளார் பிரியங்கா மோகன்..

காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட “நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்” படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. “கோல்டன் ஸ்பேர்ரோ” என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் பிரியங்கா மோகனுக்கு படக்குழு நன்றியையும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரியங்கா மோகன் நடனத்தில் உருவாகியிருக்கும் அந்தப்பாடலை பார்த்திருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பாடலையும், பிரியங்கா மோகனின் நடனத்தையும் பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, “தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் ஆடிய அழகான பாடலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. எளிமையான அழகான ஸ்டைலிஷ் ஸ்டெப்களுடன் நடன அசைவுகளை அமைத்திருக்கின்றனர், இளம் மாமியாக பிரியங்கா மோகன் க்யூட்டாக ஆடியுள்ளார். பாடல் பார்த்தவுடன் பிடிக்கவைக்கும் விதத்தில் அற்புதமாக இருக்கிறது. பாடலை எழுதியிருக்கும் தனுஷ் சார் பையன் யாத்ரா ஆச்சரியப்படவைத்துவிட்டார்” என்று பாடலையும், பிரியங்கா மோகனின் நடனத்தையும் பாராட்டியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.