சினிமா

பாடகி சுசித்ரா - தீரவில்லை ட்விட்டர் குழப்பம்

Rasus

சுசித்ரா... பிரபல தென்னிந்திய திரையுலக பாடகி. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரது கணவர் கார்த்திக் குமார். இவர் பல திரைபடங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி செய்து வருகிறார்.

சுசித்ரா சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மீது சில குற்றச்சாட்டுகளை அவருடைய ட்விட்டரில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவிட்டார். அதில், ஒரு பார்ட்டியில் தனுஷும் அவரது நண்பர்களும் தன்னிடம் முரட்டுத்தனமாகக் நடந்து கொண்டதாகவும், இதனால் தனக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டதாகவும் சர்ச்சைக்குரிய பதிவுகள் அவரால் போடப்பட்டவை இல்லை எனவும் கூறப்பட்டது.

இந்த சர்ச்சைகள் ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில் நேற்று, தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை பிரபலம் திவ்யதர்ஷினி, போன்றவர்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டது.

மேலும், தனுஷும் அனிருத்தும் ஒரு பார்ட்டியில் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். தனுஷ், அனிருத், அமலா பால், சஞ்சிதா, பாடகி சின்மயி, ஆண்ட்ரியா ஆகியோரின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட நாள், தேதி குறிப்பிட்டிருந்தார்.

பிறகு மறுபடியும் அவரது ட்விட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டதாக கூறினார். இன்று காலை மீண்டும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் அவரது ட்விட்டரில் வெளிவந்தது. இதனால் அவரது ட்விட்டர் கணக்கு அழிக்கப்பட்டது. அதன் பிறகும் அவரது பேரில் ஒரு ட்விட்டர் கணக்கு உள்ளது. அது யாரால் இயக்கப்படுகிறது என்று சரியாக தெரியவில்லை.

இதன் மத்தியில், சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். “சுசித்ரா மன அழுத்தில் உள்ளார். அவரை அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அவர் குற்றம் சாட்டிய பிரபலங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட பிரபலங்களில் பாடகி சின்மயி, நடிகை சஞ்சிதா, செல்வராகவன் ஆகியோர் இதுகுறித்து பதிலளித்துள்ளனர். பாடகி சின்மயி தன் ட்விட்டர் கணக்கில் சுசித்ரா மன அழுத்ததில் இருப்பதாகவும், இதுகுறித்து கார்த்திக் குமாரிடம் தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை சஞ்சிதா, வெளியிடப்பட்ட புகைபடங்களிலும் வீடியோக்களிலும் இருப்பது தான் இல்லை என கூறியுள்ளார்.

தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தெரிவிக்கையில் “சுசித்ரா மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் குமார் கூறியுள்ளார். அதனை மதித்து, தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,”என்று கூறியுள்ளார்.

இதனிடையே, சுசித்ராவும் கார்த்திக் குமாரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.