சினிமா

‘இனி வரும் காலம்.. வசந்த காலம்’ - மாஸ்டர் படத்தால் குதூகலத்தில் ஷாந்தனு

webteam

நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் ஷாந்தனு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனிடையே, கடந்த 29 ஆம் தேதி விஜயின் மேனேஜர் ஜெகதீஷ், அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அந்தப் பதிவில் ஜெகதீஷ், “அற்புதமாக இருந்த சில மாதங்கள் நிறைவடைந்தன. ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. விஜய்க்கும் விஜய்சேதுபதிக்கும் இதயம் நிறைந்த நன்றி. சிரித்த முகத்துடன் சிரித்த கண்களுடன் ‘மாஸ்டர்’ படத்தை கொண்டாட காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து நேற்று இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படக்குழுவினருடன் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்பதிவில், “முகத்திலும் கண்களிலும் அதற்கான புன்னகை இது. 129 நாட்கள் படிப்பிடிப்பு முடிந்தது. இதயத்திற்கு நெருக்கமான பயணம் இது. என்னையும் என் அணியையும் நம்பியதற்காக விஜய்க்கு நன்றி. இது ஒரு இமாலய வேலை, எளிதானதல்ல; இது எனது படக்குழு. பெருமிதம் கொள்கிறேன் பசங்களே” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜயின் தீவிர ரசிகரும் இயக்குநர் பாக்யராஜின் மகனுமான ஷாந்தனு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பதிவில், “எனக்கு ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. இந்தப் படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பானது. இனி வரும் காலம்.. வசந்த காலம். விரைவில் உங்களை சந்திக்கிறேன் மக்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.