சினிமா

ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!

Rasus

பிக்பாஸில் இருக்கும்போது ஒரு சிலர் என்னை கார்னர் பண்ணியது உண்மைதான் என்றும், அதற்காக ஷக்தி, ஜூலி ஆகியோரை அவர்கள் வெளியே வந்தபின்பும் கூட ஒரு சிலர் கார்னர் செய்கின்றனர் என்றும், ரசிகர்கள் யாரும் அப்படி செய்ய வேண்டாம் என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார்.

திரையில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதைவிட, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைத் தொட்டவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் தானாகவே வெளியேறினாலும் கூட சமூக வலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர் பட்டாளம் ஓயவில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவாரா என பல கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் இருந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் ஓவியா, ஒரு லைவ் வீடியோ சாட் மூலம் ரசிகர்களை சந்தித்தார். அவர் பேசிய அந்த வீடியோ இப்போது யுடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் வேகமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. வீடியோ சாட் மூலம் பேசிய் ஓவியா, “ஹலோ.. ஹாய்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க. இட்ஸ் மீ ஓவியா. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று பேச ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசிய ஓவியா, கொஞ்சம் சீரியஸான விஷங்களை பேசத் தொடங்கினார். “எனக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை இப்போது தான் உணர்கிறேன். நிஜமாக இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரொம்ப கஷ்டமான விஷயம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸில் இருந்து ஜூலி, ஷக்தி வெளியே வந்துட்டாங்க. அவர்களின் நிலைமையை யோசித்து பார்க்கும்போது மனது வலிக்கிறது. பிக்பாஸில் இருக்கும்போது ஒரு சிலர் என்னை கார்னர் பண்ணியது உண்மை தான். அப்போது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் வெளியே வந்தபின்பும் கூட ஷக்தி, ஜூலியை ஒரு சிலர் கார்னர் செய்கின்றனர். அது செய்யக்கூடாது. தயவு செய்து அப்படி யாரும் பண்ணாதீர்கள். அந்த சாபம் எனக்கு தேவையில்லை. நிகழ்ச்சியில் எல்லோருமே தப்பு செய்தார்கள். தப்பு செய்தால் தான் மனிதர்கள். கொலை செய்தவர்கள், பாலியல் குற்றங்கள் செய்தவர்களை அரசாங்கமே மன்னிக்கிறது. இது ஒரு விஷயமே இல்லை. அவர்களை தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்” என்றார்.

மேலும், “ஒரு போட்டியாளராக நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகப்போவதில்லை. ஆனால் படம் பண்ணப்போகிறேன். நான் நடிக்கும் படங்களை எனக்காக பார்க்கத் தேவையில்லை. படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் பாருங்கள். இல்லையென்றால் காரித்துப்புங்கள்” என்றார்.

மெதுவாக ஆரவ் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், “உண்மையான காதல் எப்போதும் தோற்காது. நான் காதலை நம்புகிறேன். ஒருவரை விரும்பிய பின் ஏதாவது காரணத்திற்காக அவரை வெறுக்க முடியாது” என்றார்.

உடல்நிலை பற்றிக் கூறும்போது, “இப்போது எனக்கு மன அழுத்தம் இல்லை. விடுமுறையில் இருக்கிறேன். எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னுடைய முடியைக் கேட்டு ஒரு விஃக் கம்பெனி என்னை அணுகியது. பொண்ணுங்களுக்கு முடி போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. முடியை ஷேவ் செய்தால் கூட ஸ்டைலாகத் தான் இருக்கும். என்னுடைய ஹேர்ஸ்டைல் அழகாகத்தானே இருக்கிறது? என்னை ரோல் மாடலாக எடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. தயவு செய்து யாரையும் காப்பி அடிக்காதீர்கள். சந்தோஷமாக இருங்கள்” என்று கூறி ரசிகர்களுக்கு தன் செல்ல நாயை அறிமுகம் செய்துவைத்துவிட்டு லைவ் வீடியோவைத் துண்டித்தார்.