சினிமா

நள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்!

webteam

நடிகர் ஷாரூக்கானின் பிறந்த நாள் பார்ட்டியை, போலீசார் நள்ளிரவில் நிறுத்தி, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான். ’பாலிவுட் பாட்ஷா’ என அழைக்கப்படும் இவருக்கு பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான ரசிகர் கள் உள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி இவருக்கு பிறந்த நாள்.

ஒவ்வொரு வருட பிறந்த நாளுக்கும் மும்பை பாந்த்ராவில் உள்ள இவரது வீட்டின் முன் ரசிகர்கள் கூடி அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கள். தனது வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வார் ஷாரூக் கான். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது பிறந்த நாளுக்கு வழக்கம் போலவே ரசிகர்கள் கூடினர். அவர்களின் வாழ்த்துகளை ஷாரூக் கான் ஏற்றுக்கொண்டார்.

(பார்ட்டிக்கு வரும் மாதவன், டாப்ஸி)

பின்னர் அன்று நள்ளிரவு, அவரது வீட்டின் அருகே உள்ள அர்த் என்ற நட்சத்திர ஓட்டலில் தனது பிறந்த நாள் மற்றும் தீபாவளி பார்ட்டியை நடத்தினார். இதில் ஆமீர்கான், கரண் ஜோஹர், கரீனா கபூர், ஆலியா பட், கைத்ரினா கைப், டாப்ஸி, மாதவன், ஷில்பா ஷெட்டி உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இந்த பார்ட்டி பயங்கர இசையுடன் அதிகாலை 3 மணி வரை நடந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசில் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அந்த நடந்த இடத்துக்கு வந்த போலீசார், பார்ட்டியை முடித்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஓட்டல் நிர்வாகத்துக்கும் எச்சரிக்கை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஷாரூக் கான் அங்கிருந்து உடனடியாக தனது நண்பர்கள் ஆனந்த் எல்.ராய், நிகில் அத்வானி ஆகியோருடன் வெளியேறினார். பார்ட்டியில் கலந்துகொண்டவர்களும் அங்கிருந்து கிளம்பினர்.