நிவின் பாலி web
சினிமா

உச்சம் பெறும் கேரள சினிமா பாலியல் குற்றச்சாட்டுகள்.. நடிகர் நிவின்பாலி மீது பாலியல் வழக்குப்பதிவு!

Rishan Vengai

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையானது மலையாள திரையுலகில் மிகப்பெரிய புயலையே கிளப்பியுள்ளது. நடிகைகள் பட வாய்ப்புக்காக, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அதில் உண்மை இருப்பதாகவும் பெரும்பாலான நடிகர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை

2017-ம் ஆண்டு ஒரு கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அம்பலமானபோது, ஒரு பிரபலமான நடிக்கைக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு என்ன நடக்கும் என்ற வகையில், நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

ஹேமா கமிட்டி

ஹேமா கமிட்டி சமர்பித்த அறிக்கையானது கேரள சினிமா திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 9 பெண்களுக்கு மேலாக பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்திய நிலையில், நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டன.

மோகன்லால்

இந்த நடவடிக்கையை தொடர்ந்து கேரளா சினிமாத்துறையில் உள்ள பல பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசிவருகின்றனர். எழுந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால் உட்பட மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

நிவின் பாலி

இந்நிலையில் கேரளா சினிமாத்துறை பாலியல் குற்றச்சாட்டுகளின் அடுத்த புகாராக நடிகர் நிவின் பாலி மற்றும் தயாரிப்பாளர் உட்பட 6 பேர் மீது பாலியல் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட வாய்ப்பு வழங்குவதாக பாலியல் துன்புறுத்தல்..

நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, 2023-ம் ஆண்டு பட வாய்ப்பு வழங்குவதாக கூறி துபாய் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நிவின் பாலி

அறிக்கைகளின் படி புகாரளித்திருக்கும் பெண், திரைப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்து சென்று, 2023 நவம்பரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எர்ணாகுளத்தில் பெண் புகார் அளித்துள்ளார். நிவின் பாலி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றத்தில் நிவின் ஆறாவது குற்றவாளி எனவும் கூறப்படுகிறது. எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவின் பாலி

கேரளா சினிமாத்துறையை ஆட்டிவைத்துவரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, இது போன்ற ஒரு அறிக்கை மற்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்று பல வலுவான குரல்கள் எழுந்துவருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாரபட்சமின்றி, நாடு முழுவதும் இந்த அறிக்கை பின்பற்றப்படவேண்டும் என்ற நம்பிக்கையில், தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட தெலுங்கு பெண் நட்சத்திரங்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழ் திரையுலகில் இருக்கும் பெரிய நடிகர்கள் யாரும் இதை குறித்து எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.