சினிமா

”மலைவாழ் மக்களின் பிரச்னைகளைப் பேசிய ’தேன்’ படம் ஆகச்சிறந்த படைப்பு” : சீமான் பாராட்டு

sharpana

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘தேன்’ படத்தினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியிருக்கிறார்.

சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான ’தேன்’ பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் மலைவாழ் மக்கள் தொழிற்சாலை கழிவால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அரசு மருத்துவமனைகளின் அவலங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை கதைக்களமாகக் கொண்டு இயக்கியிருந்தார் இயக்குநர் கணேசு விநாயகன். குறிப்பாக, ஒளிப்பதிவிற்கு இப்படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில், சீமான் ’தேன்’ படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டியிருக்கிறார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக தம்பி கணேசு விநாயகன் இயக்கத்தில் உலகத்தரத்திற்கு உருவாக்கப்பட்டு, விருதுகள் பலவற்றைக் குவித்த ’தேன்’ திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தேன்.

தேன் திரைக்காவியத்தை மிகச்சிறப்பான முறையில் இயக்கிய தம்பி கணேசு விநாயகன், இதுபோன்ற படைப்புகளை உருவாக்கிட ஊக்கமளித்து, தயாரிக்க துணிந்த தயாரிப்பாளர்கள் அம்பலவாணன் மற்றும் பிரேமா உள்ளிட்ட திரைபடக்குழுவினர் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுகளும், உளப்பூர்வமான வாழ்த்துகளும்” என்று கூறியிருக்கிறார்.