சினிமா

“ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம்” - சரத்குமார் ஓபன்டாக்

webteam

'வானம் கொட்டட்டும்' பட அனுபவம் குறித்து சரத்குமாரும் ராதிகாவும் கூட்டாக இணைந்து பேட்டி அளித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து, தனா இயக்கி உள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி சரத்குமார் மற்றும் ராதிகா பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பாக நடிகர் சரத்குமார் பேசும்போது, “சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். தனா இயக்கத்தில், இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எப்படி சந்திக்கின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இருவரும் போட்டியாக நினைத்ததில்லை. கதாபாத்திரங்களை உணர்ந்து அதற்கு என்ன தேவையோ அதை உள்வாங்கிதான் நடித்தோம்.

ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம். அதைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோபத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து.

மேலும், ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனிதான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி என்றே கூறலாம். எனக்கு ரஷ்யன், ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும். எங்கள் குடும்பத்தில் பல மொழிகள் பேசுபவர்கள் உண்டு. ராதிகாவும் தென்னிந்திய மொழிகள், சிங்களம், ஹிந்தி நன்றாக பேசுவார்” என சரத்குமார் கூறினார்.

நடிகை ராதிகா பேசும் போது, “நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. பலரும் கதை கூறி இருக்கிறார்கள் ஆனால் எங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லை. தனா கூறிய கதையைக் கேட்டதும் எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. இப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்பொழுதும் போட்டி இருந்தது கிடையாது.

பொதுவாக நான் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்ற மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்ற மாட்டேன். இது வரை இப்படித்தான் இருந்து வந்தது. ஆனால், இந்தப் படம் விதிவிலக்காக மாறிவிட்டது” எனக் கூறினார்.