சினிமா

விளம்பரமின்றி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய ‘சல்மான்கான்’

webteam

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான் தனது ஏற்பாட்டின்படி மும்பையில் உள்ள ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கினார்.

பாலிவுட் திரைத்துறையில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சல்மான்கான். இவரது திரைப்படங்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூல் சாதனை படைக்கும். இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர். அந்த வகையில் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர், ஏழை மக்களுக்கு ‘அன்ன தானம்’ வழங்கும் சவாலை முடிந்தவர்கள் மேற்கொள்ளுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தனது ஏற்பாட்டின்படி, மும்பையில் உள்ள ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்களை வேன்கள் மூலம் அவர் விநியோகம் செய்துள்ளார். மும்பையின் பல்வேறு பகுதிகளில் சல்மான்கானின் வேன்கள் சென்று உணவுப் பொருட்களை விநியோகம் செய்துள்ளன. அந்த வேனின் மீது ‘பசியுடன் இருக்கின்றீர்களா..’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

வேனில் விநியோகிக்கப்பட்ட ரேசன் பொருட்களை நீண்ட வரிசையில் நின்று மும்பை மக்கள் பெற்றுச் சென்றனர். உணவு விநியோகம் தொடர்பாக சல்மான்கான் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தப் பதிவினையும் வெளியிடவில்லை. இதனால் விளம்பரம் இன்றி சேவை செய்யும் நாயகன் என அவரது ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.