rima kallingal - suchitra web
சினிமா

போதை பார்ட்டி விவகாரம் | அவதூறு பரப்பியதாக பாடகி சுசித்ரா மீது ரீமா கல்லிங்கல் வழக்கு பதிவு!

Rishan Vengai

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையானது மலையாள திரையுலகில் மிகப்பெரிய புயலையே கிளப்பியுள்ளது. நடிகைகள் பட வாய்ப்புக்காக, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அதில் உண்மை இருப்பதாகவும் பெரும்பாலான நடிகர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை

2017-ம் ஆண்டுவரை மலையாள சினிமாவில் இத்தகைய விசயங்கள் இவ்வளவு வீரியமாக இருக்குமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். காரணம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் அம்பலமானபோது வெளிமாநில சினிமாத்துறைகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சியடைந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு பிரபலமான நடிக்கைக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு என்ன நடக்கும் என்ற வகையில், நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

ஹேமா கமிட்டி

அப்போது ஹேமா கமிட்டி போன்ற ஒரு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு நடிகைகள் ரேவதி, மஞ்சு வாரியர், பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்பும் (WCC) ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில் மலையாள நடிகர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்மொழியும் WCC அமைப்பில் இருக்கும் ரீமா கல்லிங்கல் மீதே பாடகி சுசித்ரா மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரீமா கலிங்கல் போதை பார்ட்டி நடத்தியதாக சுசித்ரா கூறியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், WCC அமைப்பில் இருப்பவர்கள் முதலில் ஒழுக்கமாக இருங்கள் என்ற வகையில் நெட்டிசன்கள் எதிர்வினையை ஆற்றுவதற்கும் வழிவகுத்தது.

சுசித்ரா சுமத்திய போதை பார்ட்டி குற்றச்சாட்டு..

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த பாடகி சுசித்ரா, நடிகை ரீமா கல்லிங்கல் போதைப்பொருட்கள் அடங்கிய ரேவ் பார்ட்டியை தொடர்ந்து நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். அவருடைய சினிமா வாழ்க்கை அழிவிற்கும் அதுவே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாடகி சுசித்ரா

ரீமா கல்லிங்கல் குறித்து பேசியிருக்கும் சுசித்ரா, “ரீமா கல்லிங்கல் தொடர்ச்சியாக போதைப்பொருள் பார்ட்டிகளை நடத்தினார். அவரது கேரியர் பாதிக்கப்பட்டதற்கு, அவர் நடத்திய பார்ட்டிகளே காரணம். சில விஷயங்களை ஒரு விருந்தில் பயன்படுத்தக் கூடாது, ஆனால் ரீமா கல்லிங்கல் அதையெல்லாம் தொடர்ச்சியாக பயன்படுத்தி பார்ட்டி நடத்தினார். அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பல நடிகர்கள் இதுகுறித்து பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து யாருமே ரீமாவிடம் எந்த கேள்விகளையும் கேட்பதில்லை. ரீமா கல்லிங்கல் மற்றும் அவரது அப்போதைய காதலன் ஆஷிக் அபு மீது கொச்சியில் ரெய்டு நடத்தப்பட்டதே? பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி அவர் பேசலாமா? அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். மாறாக அவர்கள் தான் புதிது புதிதாக டிரக்ஸை கொண்டு வந்தார்கள்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அவதூறு வழக்கு பதிந்த ரீமா கல்லிங்கல்..

பாடகி சுசித்ரா இதற்கு முன்பும் பல்வேறு நடிகர்கள் குறித்து அவதூறு பேசியிருந்தாலும், WCC நிறுவனர்களில் ஒருவரான ரீமா கல்லிங்கல் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தன்மீது தேவையற்ற குற்றாச்சாட்டை பாடகி சுசித்ரா முன்வைத்திருப்பதாகவும், அப்படி ஒரு பார்ட்டி நடக்கவே இல்லை என்றும், பாடகிமீது அவதூறு வழக்கு பதித்திருப்பதாகவும் ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார்.

சுசித்ரா - ரிமா கல்லிங்கல்

இதுகுறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் பதிவில், “பல ஆண்டுகளாக, உங்களில் பலர் WCC-க்காவும் மற்றும் அதன் காரணத்திற்காகவும் ஆதரவாக நிற்கிறீர்கள். இந்த ஆதரவும் நம்பிக்கையும் தான் இப்போது உங்களுக்கு இதை எழுத என்னைத் தூண்டுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக, தமிழ் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. யூடியூப் சேனலுக்கு 30 நிமிட நேர்காணலில், 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பவரின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், முதல்வர் பினராயி, மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் ஹேமா கமிட்டி மூலம் ஃபஹத் போன்ற நடிகர்களின் வாழ்க்கையை நாசப்படுத்த வேண்டும் என சதி செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஹேமா கமிட்டி எதற்காக அமைக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும்” என கூறி பாடகி சுசித்ராவின் குற்றாச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவை அணுகி பாடகிக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும் ரீமா கல்லிங்கல் வெளிப்படுத்தியுள்ளார்.