சினிமா

“தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...”?-இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி..!

webteam

ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்..? என்ற கேள்வியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் ‘ஒரு’ சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...   சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்??” என்று கேட்டுள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட தீர்ப்பு வழங்கியது. மேலும் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் குறித்த தீர்ப்பு பற்றி பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இதுபோன்ற ஒரு ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.