ரகுல் பிரீத் சிங் முகநூல்
சினிமா

ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! காரணம் என்ன?

PT WEB

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் சிக்கியது. இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரகுல் ப்ரீத் சிங் - அமன் ப்ரீத் சிங்

குறிப்பாக சமூகத்தில் பிரபலமாக உள்ள சிலரிடம் விற்பனை செய்வதற்காக போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 12 பேர் கொண்ட பட்டியலில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதர் அமன் பிரீத் சிங்கின் பெயரும் இருந்தது. அமன் உட்பட 6 பேரைப் பிடித்து அவரது சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து அமன்பிரீத் சிங் உட்பட 6 பேரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக 2021, 2022ஆம் ஆண்டுகளில் போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் ரகுல் பிரீத் சிங்கிற்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது அவரது சகோதரர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.