சினிமா

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் - விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் - விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

webteam

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட ‌தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடை‌‌யிலான மோதல் முற்றியுள்ள‌‌து. தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மாற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விஷால் கைது செய்யப்பட்டு மாலை ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு பதிவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த நடிகர் விஷால், இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிலம் ‌வழங்கப்படும் என்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை எனவும், அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விஷால் உறுதியளித்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தும் விஷால் புகார் கூறியுள்ளார். இதுகுறித்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.