சினிமா

'தமிழ் ஹீரோக்களே பிரபாஸை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' - தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டம்

நிவேதா ஜெகராஜா

தெலுங்கு திரைப்படங்கள் தோல்வியுற்றால் அதன் நாயகர்கள் தனது சம்பளத்தில் பாதியை தயாரிப்பாளருக்கு திருப்பித் தந்துவிடுவதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தெலுங்கு கதாநாயகர்களை தமிழ்த் திரையுலக நடிகர்கள் பின்பற்ற வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள 'சிட்தி' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய கே.ராஜன், தமிழில் திரைப்படங்கள் தோல்வியுற்றால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவதாகக் கூறினார்.

ஆனால் தெலுங்கில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'புரூஸ் லீ' திரைப்படம் தோல்வியுற்றபோது, படத்தின் நாயகனான ராம் சரண், தான் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்ததாகக் கூறினார். அண்மையில் நடிகர் பிரபாஸூம் தனது ராதே ஷ்யாம் திரைப்படம் தோல்வியுற்றதை தொடர்ந்து, தனது சம்பளத்தில் பாதியாக ரூ.50 கோடியை திருப்பிக் கொடுத்ததாக கே.ராஜன் சுட்டிக்காட்டினார்.