சினிமா

பிரபாஸ், ராஜமவுலிக்கு பிரதமர் மோடி கடிதம்

webteam

தூய்மையே சேவை திட்டத்துக்கு அழைப்பு விடுத்து நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி ஆகியோருக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த ‘தூய்மையே சேவை’ என்ற பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இது அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். 

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியதை அடுத்து, ’பாகுபலி’ ஹீரோ பிரபாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, இயக்குனர் ராஜமவுலி, மோகன்பாபு ஆகியோருக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், ’தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். எனவே, தூய்மை இந்தியாவை உருவாக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள், பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவையாற்ற முடியும்’ என்று கூறியுள்ளார்.