சினிமா

ஸ்ரீதேவி கனவை நிறைவேற்றிய அஜித்குமார்: போனி கபூர் தகவல்!

webteam

போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் படத்தில், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ’பிங்க்’ ஆண்ட்ரியா தாரங் ஆகியோர் நடிக்கின்றனர்.

''விஸ்வாசம்'' படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ புரொஜெக்ட்ஸ் எல்எல்பி சார்பில் போனி கபூர் தயாரிக்கிறார். இதை ’சதுரங்கவேட்டை, ’தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய, வினோத் குமார் இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

(அஜித்குமார், வித்யா பாலன், ’பிங்க்’ ஆண்ட்ரியா தாரங்)

அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார் அவர். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ’பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், ரங்க ராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடிக்கின்றனர். கோடை விடுமுறையில் வெளியிடும் நோக்கில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. 

தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது, ‘’ மறைந்த என் மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" படத்தில் அஜித் நடிக்கும்போது, எனக்கும் அவருக்குமான நட்பு தொடங்கியது. தமிழில் படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் நடிக்க வேண்டும் என்றும் ஸ்ரீதேவி விரும்பினார். அது அவர் கனவாக இருந்தது. அதை அஜித்திடமும் சொன்னார்.

உடனடியாக அஜித் சம்மதம் தெரிவித்தார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே இந்த முடிவை எடுத்தோம். அவர் கனவை நனவாக்கும் முயற்சியில் படப்பிடிப்பு குழு ஒன்றிணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் மட்டுமல்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் மற்றொரு படத்துடனும் அஜித்துடன் இணை கிறோம்’’ என்றார்.