சினிமா

“பாலா படத்திலா? நானா? நம்பவே முடியவில்லை” - மேகா ஹேப்பி

webteam

இயக்குநர் பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தில் பெங்கால் நடனக் கலைஞர் மேகா நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். 

கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இதில் விஜய் தேவேரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகவும் பேசப்பட்டது. ஆகவே அதனை தமிழில் எடுக்க முடிவு செய்தார் இயக்குநர் பாலா. அவர் எடுக்கும் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தச் செய்தியை விக்ரம் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக சில மாதம் முன்பு அறிவித்திருந்தார்.

தற்போது ‘வர்மா’ படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் ஷாலினி பாண்டே நாயகியாக தமிழில் அறிமுகமாகலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது பெங்காலை சேர்ந்த மாடல் மேகா நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேகாவே இது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், “நான் அடிப்படையாக கதக் நடனக் கலைஞர். பாலாவின் படத்திற்காக கதக் தெரிந்த நடிகையை தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேடலில் நான் அவர்கள் முன் நின்றேன். எப்படி இது நடந்தது என்றே தெரியவில்லை. பாலா படத்திலா? நானா? நம்பவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் கதக் கலைக்குதான் நான் நன்றி கூற வேண்டும்” என்று கூறியிருக்கிறார். மேலும் இந்தப் பட வாய்ப்பு வந்த பிறகு அவர் ‘அர்ஜூன் ரெட்டி’யை பார்த்ததாகவும் அதில் வரும் விஜய் தேவேரகொண்டாவை போன்ற ஒருவன் எல்லா பெண்களுக்கும் கனவு கண்ணனாக இருப்பான் என்றும் கூறியிருக்கிறார் மேகா.