சினிமா

நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு நோட்டீஸ்!

webteam

நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரை அடுத்து, மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு திருச்சூர் போலீஸார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். 

மலையாள திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ், மலப்புரம் கோல்ட் உட்பட பல முன்னணி விளம்பர படங்களை இயக்கியவர். இவர், மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ‘ஒடியன்’ என்ற படத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்கினார். அடுத்து அவர் எம்.டி.வாசுதேவ நாயரின் ’ரெண்டாம்மூழம்’ நாவலை மையமாக வைத்து மகாபாரத கதையை படமாக்குவதாக இருந்தது. இதில் மோகன்லால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தாமதமானதால் கதையை வாசுதேவன் நாயர் திரும்பி வாங்கிவிட்டார். இந்த சர்ச்சை அப்போது கேரளாவில் பரபரப்பாகப் பேசப் பட்டது. 

இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக ’ஒடியன்’ படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியார், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார். அதில், ’ஓடியன் பட ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும் அவரும் அவர் நண்பர் மாத்யூ சாமுவேலும் தனக்கு எதிராக அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் அவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மஞ்சு வாரியரின் இந்தப் புகாருக்கு இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் பதிலளித்தார். அதில், ‘உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் ஏராளமான மிரட்டல்களையும் அவமானங்களையும் சந்தித்து விட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மஞ்சுவாரியர் தன் மீதான புகாருக்கு ஆதாரமாக, வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்களையும் மேலும் சில ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து திருச்சூர் கிழக்குப் போலீசார் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஸ்ரீகுமார் மேனனுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். இந்த நோட்டீஸ் நேற்று அனுப்பப்படுவதாக இருந்தது. சில காரணங்களால் அனுப்பப்படவில்லை. இந்நிலையில் அந்த நோட்டீஸ் இன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.