மணிமேகலை vs பிரியங்கா முகநூல்
சினிமா

Stress-ல் சிக்கிய Stress Buster ஷோ! மணிமேகலை vs பிரியங்கா... என்னதான் நடக்கிறது இணையத்தில்?

திரை நட்சத்திரங்களைப் போலவே, சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ரசிகர் படை இருக்கிறது. இப்போது பொங்கியெழுவது மணிமேகலை என்ற நட்சத்திரத்தின் ரசிகர்கள்.

PT WEB

மணிமேகலை... சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான இளம் தொகுப்பாளர். 2010 ஆம் ஆண்டு, கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோதே, சின்னத்திரை நட்சத்திரமாகும் கனவில், பிரபல தனியார் தொலைக்காட்சியின் மியூசிக் சேனலில் அடியெடுத்து வைத்தவர். நேயர்களுடன் தொலைபேசியில் பேசி, அவர்களது விருப்பப்பாடலை ஒளிபரப்பும் தொகுப்பாளராக கரியரைத் தொடங்கியவர்.

அதே சேனலில், திரை நட்சத்திரங்களின் பேட்டி, பிரபல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நேயர் விருப்பம் நிகழ்ச்சியைத் தொகுப்பது என, திறம்பட செயல்பட்டு பிரபலமானவர். ஒரு கட்டத்தில், அறிமுகப்படுத்திய சேனலில் இருந்து விலகி, மற்றொரு சேனலில் இணைந்தார் மணிமேகலை.

இங்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஜொலித்ததோடு, இன்னும் பிரபலமானார். இந்த இளம் தொகுப்பாளருக்கு தனி ரசிகர் படையே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக, அவரது ரசிகர்கள் 'ஓவியா ஆர்மி'யாக உருவெடுத்திருந்தனர். அதேபோலவே, மணிமேகலைக்கு இப்போது நேரிட்டுள்ள பிரச்னைக்கு, அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக, 'மணிமேகலை ஆர்மி'யை உருவாக்கும் முடிவில்தான் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அந்த அளவுக்கு தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 'மணிமேகலை ஆர்மி' உருவாக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

நகைச்சுவைத் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டே, சமையலும் செய்யும் ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்தார் மணிமேகலை. கலகலப்புக்கும் குபீர் சிரிப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்றவர்களில் ஒருவர் பிரியங்கா.

இந்தப் பிரியங்கா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில், மணிமேகலைக்கு சீனியர். ஆனால், இந்த சமையல் நிகழ்ச்சியைப் பொருத்தவரை, மணிமேகலைதான் தொகுப்பாளர். பிரியங்கா, வெறும் போட்டியாளர்தான். அப்படியிருக்க, நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது, போட்டியாளரான பிரியங்கா, போட்டியாளராக மட்டும் இல்லாமல், தொகுப்பாளர் வேலையையும் சேர்த்து கவனிக்க, பொங்கி எழுந்திருக்கிறார் மணிமேகலை.

சுயமரியாதையே முக்கியம் என்று, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலையை தூக்கி வீசியுள்ளார் மணிமேகலை. இந்த விவகாரத்தால், ரத்தம் கொதித்துப் போயுள்ள மணிமேகலையின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் பிரியங்காவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மணிமேகலையை வெளியே போ என்று பிரியங்கா மிரட்டும் ஆடியோவும் வெளியானதால், பிரியங்காவை வசை பாடுகின்றனர். அந்த ஆடியோவே போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது பலருக்கும் தெரியவில்லை. (பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோவமாக பேசிய ஆடியோவையும், இங்கே மணிமேகலை ஒருமுறை செய்த ப்ராங்க் வீடியோவையும் கலந்துகட்டி யாரோ செய்த எடிட்தான் அது!) சமூக வலைத்தளங்களில் Fact check தெரியாக நெட்டிசன்களுக்கு, கருப்பொருளாகி விட்டது இந்த ஆடியோ. பிரியங்காவுக்கு எதிராகவும் மணிமேகலைக்கு ஆதரவாகவும் 'போஸ்ட்'கள் பறக்கின்றன.

மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. இந்த விஷயம் தொடர்பாக, வீடியோ ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ள மணிமேகலை, பிரியங்கா என்ற பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. சுயமரியாதையை விட்டுவிட்டு தனக்கு எதுவும் தேவையில்லை என்றும், தனது வேலையில் இன்னொருத்தர் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தும் நபரை ஏற்க மாட்டேன் என்றும் கூலாக விளக்கமளித்துள்ளார். தனதுவேலையில் உள்ள தலையீடுகள் பற்றி, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் பல முறை நேருக்கு நேர் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் தன்னை சமாதானப்படுத்த முயன்றதால் வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார் மணிமேகலை. என்னவோ போங்க... ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோ இப்போ ஸ்ட்ரெஸ்ஸில் சிக்கிகொண்டது என நொந்துகொள்கின்றனர் நெட்டிசன்கள்!