சினிமா

‘என்ன வந்தாலும் எனக்குரிய அரியணையை கைவிடமாட்டேன்‘-‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீடு

சங்கீதா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ட்ரெயிலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த இரண்டு பாகங்களையும் கொரோனா காலக்கட்டத்திலும் 155 நாட்களில் படப்பிடிப்பை முடித்து ஆச்சரியமளித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, நாசர், ரஹ்மான், விக்ரம் பிரபு, ஜெயராம் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் 'பொன்னிநதி', 'சோழா சோழா' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழில் இந்தப் படத்தின் ட்ரெயிலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அவரின் மிரட்டலான குரலில், சோழ பேரரசின் அரியணை, வஞ்சம், பகை, பாசம், போர் பற்றிய விரிவாக்கத்துடன், பிரம்மாண்ட சிஜி பணியில் ட்ரெயிலர் அமைந்துள்ளது.