சினிமா

பிப்ரவரி இறுதியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு?

jagadeesh

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க இயக்குநர் மணிரத்தினம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், தமிழில் இதுவரை மிகச் சிறந்த படைப்பாக இருந்து வருகிறது. சோழப் பேரரசின் சாம்ராஜியத்தை விளக்கும் மிகச்சிறந்த படைப்பான இதற்கு நிகராக வேறு நாவல் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை. ஆகவே இதனைத் திரைப்படமாக எடுக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வந்தன.

இத்தனை ஆண்டுகால கனவுக்கு ஒரு உருவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கி, இதனைத் திரைப்படமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. இதனை பல மொழிகளில் தயாரித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தப் பெரிய நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘பாகுபலி’ போல இரு பாகங்களாக வெளியாகும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம். 2019-ல் தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.