சினிமா

பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

webteam

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் வசித்து வருகிறார் பாடலாசிரியர் கபிலன். புதுச்சேரியில் பிறந்த இவர் தில் படத்தில் “உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?” என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் “ஆள்தோட்ட பூபதி”, “அர்ச்சுனரு வில்லு”, “மச்சான் பேரு மதுர”, “ஆடுங்கடா என்னசுத்தி”, “மெர்சலாயிட்டேன்”, “என்னோடு நீ இருந்தால்” எனப் பல புகழ்பெற்ற பாடல்களை இவர் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கபிலனின் மகள் தூரிகை இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தூரிகையின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கபிலனின் மகள் தூரிகை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பீயிங்வுமன் (BeingWomen) என்கிற இணைய இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார். மேலும் இவர் ஆடை வடிவமைப்பாளராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார்.