kottukkaali - thangalaan - vaazahi - Laapataa Ladies PT
சினிமா

சிறந்த இந்திய படமா? இந்தி படமா?.. ஆஸ்கார் விருதுக்கு ’லாபதா லேடீஸ்’ அனுப்பட்டதற்கு எழுந்த விமர்சனம்!

Rishan Vengai

2025 ஆஸ்கார் விருதுகளில் பங்கேற்க இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட திரைப்படம் ‘லபாதா லேடீஸ்’. அமீர்கானின் முன்னாள் மணைவி கிரண் ராவ் இயக்கி, திருமணத்தில் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக சவுக்கடி கொடுக்கும் ஒரு படமாக எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது லபாதா லேடீஸ். நல்ல படம்தான் என்றாலும், ஆஸ்கார் விருதுக்கு செல்லும் அளவிற்கு தரமான படைப்பா என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும் என பலபேர் விமர்சனத்தை வைத்துவருகின்றனர்.

2025 ஆஸ்கார் விருதுக்கு செல்வதற்கான பரிந்துரை பட்டியலில், தமிழில் இருந்து பி எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான `கொட்டுக்காளி’, நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய `மகாராஜா’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, பா இரஞ்சித் இயக்கத்தில் உருவான `தங்கலான்’, பரி இளவழகன் இயக்கிய `ஜமா’, மாரி செல்வராஜ் இயக்கிய `வாழை’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

29 படங்கள் அடங்கிய பட்டியலில் இருந்து, 5 படங்கள் இறுதிப்படுத்தப்பட்டன. ஃபில்டர் செய்யப்பட்ட 5 படங்களில் “Laapataa Ladies, தங்கலான், வாழை, Ullozhukku, Srikanth” முதலிய பெயர்கள் இடம்பெற்றன. ஆனால் இதிலிருந்து `Laapataa Ladies' சிறந்த இந்திய படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Laapataa Ladies

ஆனால் இது சிறந்த இந்திய படம்னு அனுப்பினீர்களா, அல்லது சிறந்த இந்தி படம்னு அனுப்பினீர்களா என இயக்குநர் வசந்தபாலன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.

இந்த மூன்று படத்தில் ஒன்றை அனுப்பியிருக்கலாம்..

’லாபதா லேடீஸ்’ படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டது குறித்து பேசியிருக்கும் இயக்குநர் வசந்தபாலன், கொட்டுக்காளி, உள்ளொழுக்கு, ஆடுஜீவிதம் மூன்று படங்களில் ஒன்றை அனுப்பியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “Laapataa ladies இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம். ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

சிறந்த படத்தை தேர்வுசெய்வதிலேயே தோற்றுவிடுகிறோம்..

சிறந்த படங்களாக தமிழ் திரைப்படங்கள் இருப்பதால், ஒரு இந்தி படம் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஆஸ்காருக்கு சிறந்த படங்களை அனுப்பவதிலேயே நாம் தோற்றுவிடுகிறோம் என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா உள்ளிட்ட கதையும்-கருத்தும்-தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்காகபட்டியலில் இருந்தும் இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது!

இந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' பல்வேறு கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை!

என்ன மொழியில் படம் உள்ளது என்பதை பார்க்காமல் திரை மொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம்.

இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.