ஹேமந்த் ராவ்  எக்ஸ் தளம்
சினிமா

”இது எனக்கு பெரிய அவமானம்..” - IIFA விருது விழாவில் நடந்த மோசமான அனுபவம்.. கன்னட இயக்குநர் காட்டம்!

Prakash J

ஒவ்வோர் ஆண்டும் இந்திய திரைப்பட நடிகர்களை கெளரவிக்கும் வகையில் IIFA என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான IIFA விருதுகள் நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது.

பாலிவுட் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பிரபல கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் கலந்துகொண்டார். இவர், கடந்த ஆண்டு, கன்னடத்தில், ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ (Sapta Saagaradaache Ello) என்கிற படத்தை எடுத்திருந்தார். இந்த நிலையில்தான் IIFA நிகழ்வில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஹேமந்த் ராவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர், “IIFA விருது நிகழ்வு எனக்கு ஒரு மிகப்பெரிய அவமானத்தைத் தந்த ஓர் அனுபவமாக இருந்தது. சினிமாவில் நான் கடந்த பத்தாண்டுகளாக இருந்துவருகிறேன். இந்த அவமானம் எனக்கு ஒன்றும் அவ்வளவு புதிய அனுபவம் கிடையாது. விருது நிகழ்வுகளுக்கு கலைஞர்கள் நாடு கடந்து வரவழைக்கப்பட்டு இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள். எனக்கு எந்தவித விருதும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள அதிகாலை மூன்று மணிவரை நான் உட்காரவைக்கப்பட்டிருந்தேன். இதே நிலைமைதான் என்னுடைய இசையமைப்பாளர் சரண் ராஜூக்கும் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் அவர், “இது உங்களுடைய விருது. இதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நான் நிறைய விருதுகளை வென்றதில்லை அதனால் நான் தூக்கமிழக்கவில்லை. விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டிருந்தால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதுமட்டுமில்லாமல், இந்த வருடம் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் யார் என்பதைத் தெரிவிக்காமல் நேரடியாக விருது மட்டும் அறிவிக்கப்பட்டது.

உங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி, நீங்கள் மேடையில் நிறுத்தும் கலைஞர்களை வைத்துத்தான் ஓடுகிறது. இதற்கு நேர்மாறாக இல்லை என்பதை இனிமேலாவது நீங்கள் உணர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அடுத்தமுறை, நீங்கள் விருதுகொடுக்க நான் தேவைப்படுவேன். அப்போது, அந்த விருதை சூரியன் வெளிச்சம்படாத ஓர் இருளில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் சிறந்த தொழிலைச் செய்வதற்கு எனக்கு விருது தேவையில்லை. என்னுடைய படக்குழுவினர் ஒருசிலர் விருது வாங்குவதைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது முழுவதுமாக டைம் வேஸ்ட் என்று சொல்லிவிட முடியாது" என தெரிவித்துள்ளார்.