கங்கனா ரனாவத் எக்ஸ் தளம்
சினிமா

விரைவில் ரிலீஸ்| 'எமர்ஜென்சி' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்.. உற்சாகத்தில் கங்கனா ரனாவத்!

Prakash J

இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், இயக்கி நடித்திருக்கும் படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே இப்படம் கடந்த செப்.6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து, ’எமர்ஜென்சி’ படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய சீக்கிய அமைப்பினா், இப்படத்தை தடைவிதிக்கக் கோரினா். அதாவது, சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து அப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இந்த காரணத்தினால்தான் அப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதையும் படிக்க; ”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

இதுகுறித்து அப்போது பதிவிட்ட கங்கனா, ”நான் இயக்கிய ’எமர்ஜென்சி’ திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ்பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், 'எமர்ஜென்சி' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கங்கனா ரனாவத் உற்சாகத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எங்கள் 'எமர்ஜென்சி' படத்திற்கான சான்றிதழை நாங்கள் பெற்றுள்ளோம், விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம், உங்கள் பொறுமை மற்றும் ஆதரவிற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வரலாற்று அறிக்கைகளுக்கு உண்மை ஆதாரங்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கி மத்திய தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிக்க:மகாராஷ்டிரா|ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்ட கணவர் குடும்பம்.. இளம் பெண் மருத்துவர் எடுத்த சோக முடிவு!