சினிமா

”நா.முத்துக்குமார் கவிதைகளை பாடலாக மாற்றித்தந்தால், எனது படத்தில் இடம்” - வசந்தபாலன்

sharpana

”தனது படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார்  குறித்த காட்சிகள் வருவதால் அவரது கவிதைகளையே  இளம் பாடலாசிரியர்கள் பாடலாக்கி தந்தால்,படத்தில் அப்பாடல் இடம்பெறும்” என்று இயக்குனர் வசந்தபாலன் அறிவித்துள்ளார்.

 தமிழின் முன்னணி பாடல் ஆசிரியரான நா. முத்துக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டாலும்  அவரின் ஒவ்வொரு பிறந்தநாள் நினைவுநாளை அவரது ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில், நா.முத்துக்குமாரின் நெருங்கிய நண்பரான இயக்குநர் வசந்தபாலன், நா.முத்துக்குமாரை நினைவுக்கூறும் விதமாக இளம் பாடலாசிரியர்களுக்கு பாடல் போட்டியை வைத்திருக்கிறார். அவர் இயக்கத்தில்  ‘கைதி’ பட அர்ஜூன் தாஸ் நடிக்கும் படத்தில் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதுபோல் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளதால் நா. முத்துக்குமாரின் கவிதைகளை மாற்றம் செய்து பாடல்களாக்கி கொடுத்கும் இளம் பாடலாசிரியர்களின் பாடல் படத்தில் பயன்படுத்தப்படும். அதற்கான, அங்கீரமும் சன்மானமும் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் வசந்தபாலன். இதுக்குறித்து  வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று  வெளியிட்டுள்ள பதிவில், ”கவிதைக்குள் ஒளிந்திருக்கும் திரைப்பாடலைக் கண்டறியும் கனா!! அல்லது சவால் .  என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய URBAN BOYZ STUDIOS  நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது ரசிகர்கள் அறிவீர்கள்.இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைக்கிறார்.இந்த படத்தினுடைய கதைப் போக்கில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளது. இது ஏதேச்சையானதா  அல்லது  25ஆண்டு கால நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா  அல்லது இரண்டு பேரும் ஜூலை 12 என்ற ஓரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா  அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்தில் உப்புக்கறியுடன் என்னை எழுப்பி என்னை பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

 இந்தக் கதையில் வரும் கதைநாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப்பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்து பாடுகிற ஒரு கதாபாத்திரம். நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை. மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க,  அவனும் மெல்ல அவனும் மெல்ல  நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான்.ரசிக்கிறான். இருவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு பௌர்ணமி இரவில் முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியை கதாநாயகி உச்சரிக்க , வரிகள் பாடலாகி, இசையாகி காதல் மலர்கிறது. இந்த தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்கு பாடல் வரிகள் தேவைப்பட்டது.

 நண்பரும் கவிஞருமான கபிலனிடம் எதேச்சையாக இந்த மாதிரி காட்சியமைப்பு உள்ளது என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தேன். நா முத்துக்குமாரின் கவிதை வரிகளையே உபயோகப்படுத்தலாமே என்று கபிலன் ஆலோசனை வழங்கினார். எனக்கும் அதுதான் மிக சரியாகப் பட்டது  ஆனால் நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார்.

அதிலுள்ள ஒரு காதல் கவிதையை பாடலாக மாற்றவேண்டும். அல்லது சில காதல் கவிதைகளில் இருந்து முத்து முத்தான காதல் ததும்பும்  வரிகளை தேர்ந்தெடுத்து முழுப்பாடலாக மாற்றவேண்டும். நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி. இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்கு பொருத்தமான வரிகள் இருந்தால் தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும் அது வெற்றியும் பெறும். இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக , ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதை விட , நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம்.

விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம்.காட்சிக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும் இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம் 

 அப்படி தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்து தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்து பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும். மேலும் நா.மு கவிதைக்கான காப்புத்தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.