சினிமா

“பெரியார் பிறந்தநாளில் படம் ரிலீஸாவது எனக்கு கெத்து”- 'கோடியில் ஒருவன்' இயக்குநர் ஆனந்த்

நிவேதா ஜெகராஜா

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தை இயக்கி இருக்கும் ஆனந்த் கிருஷ்ணன், “தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானால், அது எனக்கு கெத்தாக இருக்கும்” என கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், கோடியில் ஒருவன் படத்தில் சமூக நீதி குறித்து வலுவாக பேசி இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் சாதியை ஒருவர் தூக்கி பிடிப்பதால் எளிய மக்களின் வாழ்க்கை நசுக்கப்படுகிறது எனவும் ஆதங்கத்துடன் கூறினார்.

அந்த எளிய மக்களின் வாழ்க்கையை கோடியில் ஒருவன் திரைப்படத்தில் படமாக்கி உள்ளதாகவும், சமூகநீதியை பேசி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல் கோடியில் ஒருவன் திரைப்படம் பெரியாரின் பிறந்த நாளில் வெளியாவது தனக்கு கெத்தாக இருக்குமென அவர் கூறினார். இந்த விழாவில் விஜய் ஆண்டனி, நடிகை ஆத்மிகா, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இப்படம் செப்.17ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.