சினிமா

குடும்பம் இருப்பதால் என்னால் அப்படி நடிக்க முடியாது: கஜோல்

webteam

திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டார், தங்கத்தாமரை மகள் கஜோல்.

1992 ஆம் ஆண்டு ஷாருக் கான் நாயகியாக அவர் அறிமுகமான பெகுடி படம் ஆகஸ்டு 1 ஆம் தேதி ரிலீஸானது. இன்றோடு திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டது தொடர்பாக கஜோல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது தமிழில் அவர் நடித்துள்ள விஐபி-2 படமும் (ஆகஸ்ட் மாதம்) இம்மாதம் ரிலீசாக இருக்கிறது. 25-வது ஆண்டில் தான் நடித்த படம் தமிழில் ரிலீஸ் ஆவதால் தமிழக ரசிகர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நியாஸா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர். தனது 25-வது ஆண்டு கொண்டாட்டம் குறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் ஷாருக் கானும், நானும் பொருத்தமான ஜோடியாக அமைந்தோம். அதன்பிறகு இன்றுவரை எங்களைப்போல் ஒரு ஜோடி அமையவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். தற்போது தமிழில் நல்ல கதை அமைந்ததால் விஐபி-2 படத்தில் நடித்துள்ளேன். மீண்டும் பிஸியாக நடிப்பீர்களா எனக் கேட்கிறார்கள். எனக்கு குழந்தைகள் இருக்கிறது. அவர்களை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே இப்போது அதிக படங்களை ஏற்க முடியாது.

சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் என் மனதை கவரும் சப்ஜெக்டாக இருக்க வேண்டும். டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு குடும்பம், குழந்தை, கணவர் இருக்கிறார். ஒரு சில அம்சங்கள் எனக்கு பொருந்தாதவையாக உள்ளன. எனவே அவற்றை ஏற்கமாட்டேன். ‘டர்ட்டி பிக்சர் போன்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் என்னால் நடிக்க முடியாது’ என்கிறார் கஜோல். கஜோல் ஏற்கனவே தமிழில் மின்சாரக்கனவு படத்தில் நடித்துள்ளார்.