சினிமா

’இனியாவது சாதிகளற்ற சமூகமாக வாழ முயற்சிப்போம்’ – விவாதமான ரித்விகாவின் ட்விட்டர் பதிவு

Veeramani

சமூக வலைதளங்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏதேனும் ஒரு விவகாரத்தை கையிலெடுத்து, அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவிடுவார்கள். அந்த விவகாரம் பற்றி எரிந்து பின்னர் தணிந்து காணாமல் போய்விடும். தற்போது, ட்விட்டரி நடிகை ரித்விகா பதிவிட்டுள்ள ஒரு கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித்தின் மெட்ராஸ், காலா படங்களில் நடித்தவர் ரித்விகா. இந்நிலையில், ட்விட்டரில் ரித்விகாவை பட்டியலின பெண் என்று ஒருவர் கூறியிருந்தார். இதற்கு ரித்விகா காரசாரமாக பதிலளித்ததுதான் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

இதுதொடர்பாக நடிகை ரித்விகா “நான் பட்டியலினத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நான் அடையேன். நானும் அடக்குமுறைகளை செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுல் பிறந்தவள்தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம். மற்றபடி எம் அழகை பாரட்டியதற்கு நன்றி. பட்டியலின பெண்கள் என்னை விட அழகு” என்று கூறியுள்ளார்.

டிவிட்டரில் ரித்விகா தனது புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். ரிதிவிகாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.