சினிமா

“அல்லாஹ் போல்..ஸ்பீக் அப், உரக்கப் பேசு” - ‘ஜிப்சி’டீசரின் அரசியல்

webteam

ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘ஜிப்ஸி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிப்ஸி’. இதே தலைப்பில் இவர் ஏற்கெனவே ஒரு தொடரை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாசலப்பிரதேசம் பட்டம் வென்ற நடாஷா சிங் நடித்துள்ளார். இவர், பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர். ‘குக்கூ’ படதினை அடுத்து இதற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, செல்வகுமார் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று ‘ஜிப்ஸி’ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை வைத்து பார்க்கையில் ஜீவா, இதில் குதிரை ஆட்டம் நடத்தும் கலைஞராக நடித்துள்ளதாக தெரிகிறது. ஒரே இடத்தில் வாழாமல் நாடோடியாக அவரது கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் வடமாநிலங்களில் பயணிக்கும் போது ஒரு இஸ்லாமிய பென்ணுடன் காதல்வயப்படுவதாக டீசர் மூலம் விடை கிடைத்துள்ளது.

டீசரின் தொடக்கத்திலேயே, “எழுபது வருஷமா காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பயணிச்சு இருக்கேன். இந்த ஊரோட நீளம் அளம் முழுக்கத் தெரியும். ஆனா ஒரு இதயத்திற்கும் இன்னொரு இதயத்திற்குமான தூரம்தாம்பா தெரியல” என்ற வரிகளோடு மனித வாழ்வின் முரண்களை முன் வைக்கிறது ‘ஜிப்ஸி’. 

அதேபோல் ஒரு குழந்தை இந்தக் குதிரை டான்ஸ் எல்லாம் ஆடுமா என்கிறார். அதன்படி நடனமாடுகிறது குதிரை. ஆக, ஜிவா,நடாஷா பாத்திரங்களைத் தொடர்ந்து குதிரையும் இதில் ஒரு கதாபாத்திரமான வந்துள்ளது புரிகிறது. ‘அழகர் சாமி குதிரை’க்குப் பிறகு இந்தப் படத்தில் முழு நீளமாக ஒரு குதிரையும் நடித்துள்ளது. 

இந்த டீசரில், ஜீவா ஒரு இடத்தில் ‘ஜிப்ஸி’ என்றால் என்ன என்பதற்கு புதிய விளக்கத்தை அளிக்கிறார். அதில்,  ‘மதம் பிடிக்காத மனுஷ ஜாதி’ என்றதும் ஒரு காவலர், ‘நீ சொன்னது சரிதான்யா..கண்டிப்பா இவன் மாவோயிஸ்ட்தான்” என்கிறார். அதற்குதக்க ஜீவா, “அல்லாஹ் போல்..ஸ்பீக் அப், உரக்கப் பேசு” என புரட்சி வனசம் பேசுகிறார். அந்தத் தருணத்தில் கம்யூனிஸ்ட் கொடிகள் திரை முழுக்க வலம் வருகின்றன. கூடவே பகத் சிங், சிகப்பு நிறம், புலி என பல காட்சிகள் வந்து மறைகின்றன.   

ஆக, போன ‘ஜோக்கர்’ போலவே இதுவும் சிகப்பு அரசியலை முன் வைக்கும் படமாக திரைக்கு வர உள்ளது.