சினிமா

‘ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கினேன்’ - ‘13’ பட செய்தியாளர் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ்

சங்கீதா

ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கியதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ என்ற திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் திரைப்படத்தின் நாயகிகள் கலந்து கொண்டனர். ‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஹாரர் கிரைம் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

அதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் பொழுது, தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ ஹாரர் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு ஹாரர் திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்து விட்டேன். தற்போதைய சூழலில் வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் கிளிஷேவ் வகையில் உள்ளன. எனவே தயாரிப்பாளர் கதை கேட்க வலியுறுத்தியபோது, ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை, குறிப்பாக ஹாரர் காமெடி திரைப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன் என தெரிவித்தார்.

ஆனால் இந்தக் கதையை கேட்டப் பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன். அந்த அளவுக்கு கதை சுவாரஸ்யமாக இருந்தது என தெரிவித்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஜி.வி. பிரகாஷ் கடைசியாக ‘ஐங்கரன்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.