சினிமா

தெலுங்கு மெர்சலுக்கும் நியாயமான தணிக்கை சான்று: பிரசூன் ஜோஷி பேட்டி

Rasus

தமிழ் பதிப்புக்கு வழங்கியதுபோல் தெலுங்கு மெர்சலுக்கும் நியாயமாக தணிக்கைச் சான்று வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.

'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி' திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் அதிகாரிகள் 'அதிரிந்தி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனிடையே ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. தமிழில் எழுந்த பிரச்னைகள் போல், தெலுங்கிலும் சிக்கல் ஏற்படாமல் இருக்க டப்பிங்கில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை மியூட் செய்ய சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியதாவும், அதற்கு படக்குழு ஒப்புக்கொண்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் தமிழ் பதிப்புக்கு வழங்கியது போல் தெலுங்கு மெர்சலுக்கும் நியாயமாக தணிக்கைச் சான்று வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படம் வெளியாகும் தேதியை முடிவு செய்யும் போது, தணிக்கைக்கான காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரசூன்ஜோஷி அறிவுறுத்தியுள்ளார். மேலும், படத்தை விரைவில் தணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை குழுவினருக்கு படக்குழு அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.