எமர்ஜென்சி எக்ஸ் தளம்
சினிமா

’எமர்ஜென்சி’ படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.. கங்கனா அறிவிப்பு.. இதுதான் காரணமா?

Prakash J

இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், இயக்கி நடித்திருக்கும் படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே இப்படம் இன்று (செப்.6) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க; உ.பி.| பள்ளியில் பிரியாணி சாப்பிட்ட 3ஆம் வகுப்பு மாணவர்.. தனியறையில் பூட்டிய தலைமை ஆசிரியர்!

இதுதொடர்பாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில், ”நான் இயக்கிய ’எமர்ஜென்சி’ திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ்பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தச் சூழலில், ’எமர்ஜென்சி’ படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சீக்கிய அமைப்பினா் இப்படத்தை தடைவிதிக்கக் கோரியுள்ளனா். அதாவது, சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த காரணத்தினால்தான் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ஷாக் கொடுக்கும் 2024 | ஒரே மாதத்தில் 27 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய 40 நிறுவனங்கள்!