சினிமா

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : பிரபல பாடகி சுசீலா வேண்டுகோள்

webteam

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி சுசீலா தன்னைப் பற்றி வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தான் நலமுடன் இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

’இசையரசி’ என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி சுசீலா பல்வேறு மொழிகளில், பல பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் பாடகி சுசீலாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதை மறுக்கும் வகையில் அவர் தனது ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தான் நலமுடன் இருப்பதாகவும், தனிப்பட்ட விஷயத்திற்காக அமெரிக்காவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னை பற்றி வெளிவரும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாளைய தினம் அவர் இந்தியாவிற்கு திரும்ப உள்ளதாகவும் அப்போது செய்தியாளர்களை சந்திப்பதாகவும் சுசீலா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். பாடகி சுசீலா உலக அளவில் அதிக பாடல்களை பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அதே போல் இந்தியாவில் முதன் முறையாக தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி என்ற பெருமையும் இவரையே சேரும்.