vetrimaaran web
சினிமா

”கதையை எப்படி சொல்லவேண்டும் என அந்நிலம் எனக்கு சொல்லும்..” - படம் உருவாகும் விதம் பற்றி வெற்றிமாறன்!

Johnson

சமீபத்தில் The Hollywood Reporter India நடத்திய ரவுண்ட் டேபிள் விவாதத்தில் வெற்றிமாறன், பா இரஞ்சித், ஸோயா அக்தர், கரண் ஜோஹர், மகேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் `விடுதலை’ படம் உருவாக ஏன் இத்தனை காலம் எடுத்துக் கொள்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார். இதில் கலந்து கொண்ட இயக்குநர் ஸோயா அக்தர் “ இது புரளியா எனத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஸ்க்ரிப்ட் இல்லாமல் படப்பிடிப்புக்கு செல்வீர்கள் என சொல்கிறார்களே?” எனக் கேட்டார்.

அதற்கு பதலளித்த வெற்றிமாறன், கதையை எப்படி சொல்லவேண்டும் என அந்நிலம் எனக்கு சொல்லும் என அவருடைய படங்கள் உருவாக தாமதமாவது குறித்து பேசியுள்ளார்.

கதையை எப்படி சொல்லவேண்டும் என அந்நிலம் எனக்கு சொல்லும்..

அவருடைய படம் உருவாவது குறித்து பேசிய வெற்றிமாறன், ” `விடுதலை’ படத்தையே உதாரணத்துக்கு சொல்கிறேன். நான் என் தயாரிப்பாளரை அழைத்து, லாக்டவுனில் நாலரை கோடியில் ஒரு சிறிய படம், 40 நாட்களில் எடுக்கலாம் எனக் கூறினேன். ஆனால் இப்போது மொத்தமாக 200 நாட்கள் படம்பிடித்துள்ளேன். மேலும் படம் இரண்டு பாகமாக மாறிவிட்டது. நான் ஒரு யோசனையுடன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வேன். அங்கு நடிகரைப் பார்ப்பேன், அவரின் கதாப்பாத்திர ஆழத்தைப் பார்ப்பேன். அந்த நடிகரை அந்த நிலத்திற்கு பொருத்துவேன். அக்கதையை எப்படி சொல்லவேண்டும் என அந்நிலம் எனக்கு சொல்லும். நான் மனதில் வைத்திருக்கும் காட்சிகளை அந்நிலத்திற்கு ஏற்ப மாற்றுவேன்.

விடுதலை

அம்மாற்றங்களுக்கு ஏற்ப சில கதாப்பாத்திரங்களை சேர்க்க வேண்டிய தேவை உருவாகும். அதில் சில பெரிய நடிகர் நடிக்க வந்தால், அதற்கேற்ப காட்சி வடிவமைப்பு, அவர்களின் சம்பளம் என பலவற்றையும் சமாளிக்க படத்தை இரு பாகங்களாக மாற்ற வேண்டியதானது. இன்னும் சொல்லப் போனால், நான் விடுதலை இரு பாகங்களையும் முடித்துவிட்டு, அதை ஜனவரி மாதம் ரோட்டர்டாம் திரைவிழாவில் திரையிட்டேன். அதன் பிறகு இரண்டாம் பாகத்திற்காக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். என்னிடம் நான்கரை மணிநேரப் படம் இருந்தது. அதை எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பார்த்தார், மகிழ்ச்சியுடன் வெளியிடலாம் என்றார். ஆனால் நானோ, இல்லை இரண்டாம் பாகத்தில் போதாமை உள்ளது. அது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான உரையாடல். அதை காட்சிப்படுத்துவது சவாலானது. இன்னும் படம்பிடிக்க வேண்டும் என்றேன். இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கு எனது தயாரிப்பாளர் உறுதுணையாக இருந்தார்.

Viduthalai

அவர் மட்டுமல்ல எனது எல்லா பட தயாரிப்பாளர்களும் மிக ஆதரவாக இருந்தனர். கூடவே எனது நடிகர்களும். விஜய்சேதுபதியை வெறும் எட்டு நாட்கள் நடிக்க சொல்லி அழைத்தேன். ஆனால் அவரை வைத்து கிட்டத்தட்ட 120 நாட்கள் படம்பிடித்தேன். எல்லோரும் என்னை ஒரு விதத்தில் நம்புகிறார்கள். ஆரம்ப காலத்திலேயே தனுஷ் என்னை நம்பினார்.

என்னுடைய முதல் படத்தை (பொல்லாதவன்) 89 நாட்கள் + பேட்ச் ஒர்க் 3 நாட்கள் ஷூட் செய்தேன். 1 லட்சத்தி 47 ஆயிரம் அடி ஃபிலிம் ஷூட் செய்தேன். இரண்டாவது படத்தில் 2 லட்சத்தி 17 ஆயிரம் அடிகள் ஷூட் செய்தேன்.

ஆடுகளம் படப்பிடிப்பு 120 நாட்கள் நடந்தது. இதற்கு என்னுடைய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என மொத்த குழுவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.அவர்கள் என்னை நம்பினார்கள், என்னுடைய தொலைநோக்குப் பார்வையை அவர்களுடையதாக்கிக் கொண்டார்கள். எனக்கு ஆதரவளித்தார்கள்.

விசாரணை படப்பிடிப்பையும் நான் ஸ்க்ரிப்ட் இல்லாமல்தான் படமாக்கினேன். ஆனால் அதன் படப்பிடிப்பு 39 நாட்களில் முடித்துவிட்டேன். 2 கோடியே 72 லட்சத்தில் அதனை படமாக்கினேன். அதுதான் என்னுடைய சிறந்த படம் எனச் சொல்வேன்.” என்றார்.