இயக்குநர் சூர்யபிரகாஷ் முகநூல்
சினிமா

மாயி பட இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைவு | “நேற்றுகூட அவரோடு பேசினேன்...” - சரத்குமார் வேதனை

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்த மாணிக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் இயக்குநர் சூர்யபிரகாஷ். இதனையடுத்து, சரத்துமாரின் மாயி, திவான் ஆகிய படங்களையும், ஜீவன் நடித்த அதிபர் போன்ற திரைப்படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார்.

இறுதியாக இவர் இயக்கிய வருசநாடு என்ற திரைப்படம் இன்னும் வெளியாகாத சூழலில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், இயக்குநர் சூர்யபிரகாஷ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் தங்களின் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தவகையில், நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், இயக்குநர் சூர்யபிரகாஷின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.