இரண்டு மாதங்களாக ட்விட்டரில் எதுவும் பதிவு செய்யாமல் இருந்த இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று, அந்தகாரம் படங்களை பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ஷங்கர் இந்தியன் படத்தின் விபத்துக்குப்பிறகு அதிகம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை. பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உயிரிழந்த செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ”சமீபத்தில் சூரரைப் போற்று படத்தை ஜி.வி பிரகாஷின் ஆத்மார்த்தமான இசையுடன் ரசித்தேன். அதோடு, அந்தகாரம் பத்தில் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு சிறந்ததாக இருந்தது. ஜல்லிக்கட்டு படத்தில் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை வித்தியாசமாக இருந்தது” என்று பாராட்டியுள்ளார்.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வெளியான சூரரைப் போற்று வெற்றியடைந்து பாராட்டுக்களைக் குவித்தது.
இயக்குநர் அட்லி தயாரித்த ’அந்தகாரம்’ படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.
அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜல்லிக்கட்டு படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்குச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.