சினிமா

பார்வையாலேயே மிரட்டும் செல்வராகவன்: கவனம் ஈர்க்கும் ‘சாணிக்காயிதம்’ ட்ரெய்லர்

sharpana

செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

’ராக்கி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 80-கால பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ‘சாணிக்காயிதம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், வரும் மே 6 ஆம் தேதி ‘சாணிக்காயிதம்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

   ”உன் பேரென்ன? எத்தனை கொலை பண்ணீருக்கீங்க” என்று காவலர் கேட்க, கைகளில் விலங்குகளுடன் “சங்கையா... பொன்னி” என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சியிலேயே செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக, செல்வராகவன் ’ஒன்னு... ரெண்டு’ என்று செய்த கொலைகளை கூறிக்கொண்டே கேஷுவலாக சிகரெட் பற்றவைத்து நடிப்பில் செம்ம மிரட்டல் தருகிறார். வசனமே இல்லை என்றாலும் அவரது பார்வையும், உடல்மொழியுமே படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 

”சாணிக்காயிதம்’ வெளியாகும் அதே மே 6-ஆம் தேதி ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’, ‘அக்கா குருவி’, 'டைட்டானிக் காதலும் கவுந்துபோகும்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.