96 movie pt
சினிமா

’எழுதி முடிச்சுட்டேன்’ | ’96’ பார்ட் 2.. மீண்டும் வரும் ராம்-ஜானு.. இயக்குநர் கொடுத்த செம்ம அப்டேட்!

Rishan Vengai

சிறந்த காதல் படைப்புகளுக்கு தமிழ்திரையுலக ரசிகர்களின் மனங்களில் எப்போதும் தனிஇடம் உண்டு. அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த காதல் உலகையும், இளைஞர்களின் மனதையும் கட்டிப்போட்ட திரைப்படம் என்றால் அது ’96’. எல்லோருடைய பள்ளிப்பருவ காதல் படலங்களையும் அசைத்துவிட்டுச்சென்ற 96 திரைப்படம், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்துவிதத்திலும் ரசிகர்களின் நெஞ்சத்தில் மறக்கமுடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்சென்றது.

96

ராமாக விஜய் சேதுபதியும், ஜானுவாக திரிஷாவும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தனர். நடிப்பில் ஒருபுறம் அவர்கள் மயிலிறகால் வருடினார்கள் என்றால், மறுபுறம் ஒருமுறையாவது அவர்கள் இருவரும் சிறிய அணைப்பிற்குள்ளாவது தங்களை இருநிமிடங்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தை ரசிகர்களுக்கு விதைத்து, பின்னர் இல்லை இதுதான் அவர்களின் கதாபாத்திரங்களுக்கான அழகியல் என்று எல்லோருடைய ஆத்மார்த்தமான பாராட்டையும் பெற்றுச்சென்றிருப்பார் இயக்குநர் பிரேம் குமார்.

96

இப்படி மறக்கமுடியாத பள்ளிப்பருவ காதல் கதையை விருந்தாக படைத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

96 பாகம் 2-க்கான கதை ரெடி..

96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் பிரேம் குமார், ’96’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன். எனக்கே அது மிகவும் பிடித்திருந்தது. 96 படத்தின் முதல் பாகத்தை கெடுத்துவிடக்கூடாது, இரண்டாம் பாகம் என்ற ஒன்றை எடுத்துவிடக்கூடாது என்பதில் நானே கவனமாக இருந்தேன். ஆனால் எழுதிமுடித்தவுடன் எனக்கே மிகவும் பிடித்திருந்தது.

இந்த கதையை விஜய் சேதுபதியின் மனைவியிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. இதனையடுத்து தான் இந்த படத்தை உருவாக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கதையில் சிறிய வேலைகள் எல்லாம் மிஞ்சமிருக்கு, முடித்துவிட்டுதான் விஜய் சேதுபதியிடம் சொல்லலாம் என இருக்கிறேன். விஜய் சேதுபதி, திரிஷா தேதியை பொறுத்து இப்படம் உருவாகும்” என கூறியுள்ளார். அவர் கொடுத்துள்ள இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

பிரேம்குமார் தற்போது 'மெய்யழகன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். கார்த்தி, அரவிந்த சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.