சினிமா

’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்!

webteam

’கடைக்குட்டி சிங்கம்’ படம் ஹிட்டானதை அடுத்து  சொந்த ஊரில் ஊர்க்காரர்களுடன் கிடா வெட்டி, பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

‘பசங்க’ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த இவர், அடுத்து அருள்நிதி நடித்த ’வம் சம்’, சிவகார்த்திகேயன் அறிமுகமான ’மெரினா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சூரியா நடித்த ’பசங்க 2’, விஷாலின் ’கதகளி’, சிம்பு நடிப்பில் ’இது நம்ம ஆளு’ படங்களை இயக்கினார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 


இந்நிலையில் சத்யராஜ், கார்த்தி, சாயிஷா நடிப்பில் அவர் இயக்கிய ’கடைக்குட்டி சிங்கம்’ சூப்பர் ஹிட்டானது. விவசாயத்தின் முக்கியத்துவத் தைச் சொல்லும் இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி இப்போதும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி பாண்டிராஜ் கூறும்போது, ’நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். என் தந்தை விவசாயி. ஆனால், எங்களால் சில பிரச்னை கள் காரணமாக அதில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் என் மனதுக்குள் அந்த விவசாயி உயிர்ப்போடு இருந்துகொண்டிருக்கிறான். விவசாயம் பற்றி படம் இயக்க வேண்டும் என்று சில வருடங்களாக யோசித்துக்கொண்டே இருந் தேன். ’கடைக்குட்டி சிங்கம்’ உருவானது. சினிமாவுக்கு கதைதான் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்தப் படத் தின் பட்ஜெட் அதிகம். அதனால் கதையையும் பிரமாண்டமாக காண்பிக்க முடிந்தது.

ஏன் கிராமத்து கதையை அதிகமாக எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எனக்கு அந்த வாழ்க்கை அதிகமாக தெரியும். அதனால் எனக்குத் தெரிந்ததை எடுக்கிறேன். ஒரு நடிகருக்கு படம் ஹிட்டானால் நான்கைந்து படங்கள் கிடைக்கும். ஒரு இயக்குனருக்கு படம் தோல்வி அடைந்தால் அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடாது. அதனால் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே நினைத்து இயக்குகிறேன். இந்த படம் வெற்றி பெறும் என்று தெரியும். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை’ என்றார்.

படத்தின் வெற்றியை கொண்டாட தற்போது தனது சொந்த ஊரான புதுகோட்டையிலுள்ள விராச்சிலைக்குச் சென்றுள்ளார் பாண்டிராஜ். அங்கு ஊர் சொந்தபந்தங்களுடன் குல தெய்வ கோயிலுக்கு குதிரை எடுத்தார். பின்னர் கிடா வெட்டி, பொங்கல் வைத்து அவர்களுடன் கொண் டாடினார்.